ஞாயிறு, 27 ஜூலை, 2014

இருக்கு ஆனா இல்ல - சினிமா விமர்சனம்

தையாவது புதுசாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதான் ‘இருக்கு ஆனா இல்ல’ படம். படத்தின் கதை வித்தியாசமானது என்பதில் சந்தேகமில்லை.


வழக்கமான காதல் கதை தான். தன்னைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கும் ஒரு மனிதன். திடீரென அவன் வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்கையில் மாற்றங்கள் நிகழ்கிறது. இதுதான் கதையின் போக்கு என்றாலும், அவன் வாழ்வில் வந்த அந்த பெண் ஒரு பேய்! 
இது பயத்தை உண்டாக்கும் பேய் இல்லை, ரசிக்கிற வகையில் ஹீரோவோடு படம் முழுக்க உலாவும் ஒரு அழகிய பேய். அந்த பேய் பெண்ணை ஒரு கட்டத்தில் ஹீரோ காதலிக்கிறார் என்பது விளங்க முடியா கவிதை!

விரக்தியில் சரக்கு அடித்து பைக்கில் வீடுக்கு போகும் ஹீரோ, வழியில் ஒரு விபத்தை சந்திக்கிறார். அந்த விபத்தில் அவர் உயிர் தப்பினாலும், ஒரு பெண் உயிரிழப்பதை பார்க்கிறார். வீட்டிற்கு வந்தால் அந்த பெண் வீட்டில் இருப்பது தான் கதையின் முதல் ஆச்சரியம். பயத்தில் காய்ச்சல் வந்த ஹீரோ மருத்துவரை அனுக, அது பேய் தான் என்பது கன்பார்ம் ஆகிறது.

தான் யார் என்று தெரிந்துகொள்ள ஹீரோவையே சுற்றித் திரிகிறது அந்த பேய். ஹீரோவும் பல முயற்சிகள் செய்து அந்த பெண் பேயின் வீட்டைக் கண்டுபிடிக்கிறார். இருந்தும் அந்த பேய் ஏதோ ஒரு தேவையோடு ஹீரோவை அனுக, அந்த பேய் போலவே இருக்கும் அந்த பேயின் தங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றி அவரைக் கரம் பிடிக்கிறார்.

நடுவே பலமான சஸ்பென்ஸ் காட்சிகள் வந்து போகிறது. திரைக்கதையின் வேகத்தைக் கூட்டி இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். தனியார் மருத்துவமனைகளின் மோசடி மருத்துவர்களை ஒரு பிடி பிடித்திருப்பது பாராட்டுக்குறிய விஷயம்.

ஹீரோ விவந்த் நடிப்பில் அசத்துகிறார். காடு மாதிரி முடியை வைத்திருந்தவர், திடீரென அதை ட்ரிம் பண்ணி ஸ்மார்ட்டாக வந்து அசத்துகிறார். ஹீரோயின் ஏடன், பேய் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். படத்தில் நம்மை அதிக அளவில் திருப்தியடைய வைப்பவர் ஹீரோவின் நண்பராக வரும் ஆதவன். இன்னும் பல வாய்ப்புகள் அவருக்கு காத்திருப்பது உறுதி.


உண்மையைக் கண்டறிய நோயாளியாக மருத்துவமனைக்குள் உளவு பார்க்க செல்லும் காட்சியில் ஒய்.ஜி.மகேந்திரன் வயறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.  

இது கதையா கற்பனையா என்று குழம்பும் அளவிற்கு சரக்கு பார்டியில் கதை சொல்லும் ஐடியாவுடன் படத்தை தொடங்கி, அதே காட்சியில் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் கே.எம்.சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக